சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய ஒரு நிகழ்வு சின்னத்திரை நடிகை சித்ராவின் மறைவு.பிரபல தொகுப்பாளராகவும்,நடிகையாகவும் இருந்து வந்த சித்ரா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் தமிழக மக்களிடம் மிகுந்த ஆதரவை பெற்ற சீரியல் நடிகையாக இருந்து வந்தார்.
டிசம்பர் 9ஆம் தேதி இவர் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இவருக்கு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது அனைவரும் அறிந்ததே.
விசாரணையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு சித்ரா மற்றும் ஹேமந்த்திற்கு பதிவு திருமணம் முடிந்தது தெரியவந்துள்ளது.மேலும் பலரும் சித்ரா தற்கொலை செய்துகொள்பவர் அல்ல இது கொலை என்றும் தெரிவித்து வருகின்றனர்.போலீசார் இந்த வழக்கு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ரா முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டார்.இவர் மறைவை அடுத்து அந்த கேரக்டரை அப்படியே முடித்துக்கொண்டு , இந்த கேரக்டருக்கு புதிதாக யாரையும் மாற்றவேண்டாம் என்று ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் புதிய முல்லையாக சித்ராவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் நெஞ்சம் மறப்பதில்லை,ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்த சரண்யா நடிக்கவுள்ளார் என்று சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.முல்லையாக நான் நடிக்கப்போவதாக பல செய்திகள் வலம் வருகின்றன அது உண்மையல்ல முல்லை என்றால் அது சித்ரா மட்டும்தான் , முல்லையாக மக்கள் மனதில் சித்ரா இருக்கிறார் எப்போதும் இருப்பார் இந்த செய்தி உண்மையானதல்ல என்று தெளிவுபடுத்தினார்.