அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் சிறிய ரோலில் நடித்து அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதைத்தொடர்ந்து காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாம் சீசன் மூலம் உலகளவில் பிரபலமானார் சாக்ஷி. அதன் பிறகு சின்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். படவாய்ப்புகள் ஒரு பக்கம் வந்துகொண்டிருக்க, சோஷியல் மீடியாவில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
லாக்டவுன் நேரத்தில் திரையுலகை சேர்ந்தவர்கள் கடுமையாக ஒர்க்அவுட் செய்கிறார்கள். ஒர்க்அவுட் செய்வது, வாக்கிங் செல்வது, சைக்கிள் ஓட்டுவது என்று பிசியாக இருக்கிறார்கள். அவர்களை பார்த்து சாதாரண மக்களுக்கும் ஃபிட்டாக இருக்கும் ஆசை ஏற்பட்டு வருகிறது. இப்படியிருக்க அசத்தலான ஒரு பதிவை இன்ஸ்டாகிராமில் செய்துள்ளார் சாக்ஷி.
அதில் பழைய புகைப்படத்தை பகிர்ந்து, இது ஒரே ஆள் தான் என்று எத்தனை பேர் நம்புகிறீர்கள்? இது நான் தான். இரண்டுமே. முகத்தில் இருக்கும் கொழுப்பை குறைப்பது தான் பெரிய சவாலாக இருந்தது. பள்ளியில் என் வகுப்பில் படித்தவர்கள், சீனியர்கள் என்னை கிண்டல் செய்திருக்கிறார்கள். என்னை புத்தக புழு என்றும், பலர் குண்டு பூசணிக்காய் என்றும் கலாய்த்தனர். அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். படிப்பு மட்டும் தான் எனக்கு அப்பொழுது குறியாக இருந்தது.
நான் பள்ளி முதல் எம்.பி.ஏ. வரை படிப்பில் அனைவரையும் முந்தினேன். நான் கொழு கொழுவென இருந்ததை விரும்பினேன். நான் இதை எனக்காக செய்ய முடிவு செய்தேன். நான் ஒரு நாளும் பட்டினி கிடந்தது இல்லை. அறுவை சிகிச்சை செய்தோ, செயற்கையாகவோ எதையும் செய்யவில்லை. அதனால் தான் அதிக நாட்களானது. எனக்கு என்னை மிகவும் பிடித்துள்ளது. கடின உழைப்பு, விடா முயற்சி, அர்ப்பணிப்பு இருந்தால் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
ஒரு விஷயத்தை தீர்மானித்து அதில் கவனம் செலுத்தினால் அதை அடைய பிரபஞ்சம் உங்களுக்கு வழி காட்டும். தற்போது நான் சரியான இடத்தில் இருக்கிறேன். கல்லூரி காலத்தில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட பெருமைப்படுகிறேன். நீங்கள் சாதித்த பிறகு உங்களை விமர்சித்தாலோ, கிண்டல் செய்தாலோ அதை கண்டுகொள்ள வேண்டாம். நம்ம தளபதி விஜய் சொன்னது சரிதானே...என்று உற்சாகமாக பதிவு செய்துள்ளார்.
நடிகை சாக்ஷி கைவசம் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள டெடி படத்திலும், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 3 போன்ற படங்கள் உள்ளது.