தென்னிந்திய திரையுலகில் முடிசூடா நாயகியாக அசத்தி வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். தெலுங்கு திரையுலகம் தவிர்த்து தமிழிலும் பிரபலமாக திகழ்கிறார். மகேஷ் பாபு நடித்த சரிலேறு நீக்கெவரு படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களை பெரிதளவில் ஈர்த்தது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டிக்டாக் என பல வீடியோக்களை பதிவு செய்தும், சோஷியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் நீங்கள் தியேட்டரில் பார்த்த முதல் படம் எது? என்று ராஷ்மிகாவிடம் கேட்க, அதற்கு நான் முதலில் பார்த்த படம் கில்லி. எனது தந்தை அழைத்து சென்றார். என் தந்தை ஒரு சினிமா பிரியர். ஆனால் நான் நடிகையான பின்பு, ஏனோ அவர் அப்படி இல்லை என்று பதிலளித்துள்ளார். கில்லி படம் தளபதி ரசிகர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த படம். இந்த பதிவை தற்போது தளபதி ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.