திரையுலகில் அனைவரும் விரும்பும் நடிகராக திகழ்பவர் நடிகர் ராணா டகுபதி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் தல அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நடித்திருந்தார். பாகுபலி படத்தில் இவரது நடிப்பை கண்ட ரசிகர்கள் கொண்டாட துவங்கினர். தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் காடன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ராணா தன் காதலி மிஹீகா பஜாஜுக்கு ப்ரொபோஸ் செய்ய அவரும் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து இரு வீட்டாரும் சந்தித்து பேசி திருமணத்தை நிச்சயம் செய்தார்கள். ராணா, மிஹீகாவின் திருமணம் வரும் 8-ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கவிருக்கிறது. ராணா, மிஹீகாவின் திருமணம் ஹைதராபாத்தில் இருக்கும் ஸ்டார் ஹோட்டலில் நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் ராணா குடும்பத்தாருக்கு சொந்தமான ராமநாயுடு ஸ்டுடியோஸில் திருமணம் நடக்கப் போகிறதாம்.
திருமணம் குறித்து ராணாவின் தந்தையும், தயாரிப்பாளருமான் சுரேஷ் பாபு கூறியதாவது, திருமணத்தில் 30 பேர் தான் கலந்து கொள்வார்கள். இரு வீட்டார் மட்டுமே கலந்து கொள்கின்றனர். நாங்கள் நெருங்கிய குடும்ப நண்பர்கள், திரையுலக நண்பர்களை கூட அழைக்கவில்லை. கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் நாங்கள் நிறைய பேரை அழைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று கூறினார்.
திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்திருக்கிறோம். திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் கோவிட் 19 பரிசோதனை செய்யப்படும். திருமணம் நடக்கும் இடத்தில் ஆங்காங்கே சானிடைசர் வைக்கப்படும். சமூக விலகல் கடைபிடிக்கப்படும். அனைவரும் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறோம். ராணா, மிஹீகாவை நேரில் வாழ்த்த பலர் விரும்புகிறார்கள். ஆனால் இந்த நேரத்தில் பாதுகாப்பு தானே முக்கியமானது.
இந்த கொரோனா நிலைமை சரியாகி, இயல்பு நிலை திரும்பியவுடன் பார்ட்டி அல்லது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கக்கூடும் என்று நெருங்கிய திரை வட்டாரம் மூலம் செய்தி வெளியானது. இந்நிலையில் ராணா மற்றும் மிஹீகாவின் ப்ரீ-வெட்டிங் போட்டோ ஷூட் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது என்ற ஏக்கம் இருந்தாலும், ராணாவின் திரையுலக நண்பர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.