திரையுலகின் சிறந்த நடிகைகளுள் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். தடையறத் தாக்க படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகியவர், தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, NGK போன்ற படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பிற மொழிப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
கொரோனா காலத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில், தனது வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வந்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். டெல்லியில் உள்ள தனது பெற்றோர்களை பார்க்க சமீபத்தில் டெல்லி சென்றிருந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், மீண்டும் ஹைதராபாத்துக்கு திரும்பினார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் 15 மில்லியன் நபர்கள் ரகுல் ப்ரீத் சிங்கை பின்தொடர்ந்து வருகிறார்கள். இதற்காக தனது ரசிகர்களுக்கு நன்றி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரகுல். ரகுலின் இந்த வீடியோ பதிவால் குஷியில் உள்ளனர் திரை விரும்பிகள். இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார் ரகுல். இவரது நடிப்பை காண ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள்.
கடந்த 1996-ம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் தாத்தாவான சேனாபதியை மீண்டும் காண ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். விவேக், டெல்லி கணேஷ், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் போன்ற நட்சத்திரங்கள் இதில் உள்ளனர். சில நாட்கள் முன்பு இந்தியன்-2 படப்பிடிப்பின் போது க்ரேன் அழுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த சோகத்தில் இருந்து மீண்டு வருவதற்குள், கொரோனா எனும் கொடிய வைரஸ் பரவி உலகையே வாட்டி வதைக்கிறது.
லாக்டவுன் காரணமாக திரைத்துறை சார்ந்த அனைத்து பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது சமூக இடைவெளியுடனும், பாதுகாப்புடனும் பல திரைப்படங்களின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்திற்கான எடிட்டிங் பணிகளை இயக்குனர் ஷங்கர் துவங்கிவிட்டதாக செய்திகள் வெளியானது.
இந்தியன் 2 படப்பிடிப்பு அனுபவம் குறித்து பேசிய ரகுல், என் தொழில் வாழ்க்கையில் இவ்வளவு சீக்கிரமாக ஷங்கர், கமல்ஹாசன் போன்ற அற்புதமான மனிதர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு துறையில் திறம்படச் செயல்படுபவர்கள் உங்களைச் சுற்றி இருக்கும்போது நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் படப்பிடிப்பில் இருக்கும் விதம், ஒரு காட்சியை அணுகும் விதம், அதற்குத் தரும் அழகு என, எழுத்து வடிவில் இருக்கும்போது ஒரு விஷயம் இருக்கும். அதுவே படப்பிடிப்பில் மெருகேற்றப்பட்டு வேறொரு விஷயமாக மாறும் என்று புகழாரம் சூட்டினார் ரகுல்.