பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்த இயக்குனர் அட்லி , ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து தளபதி விஜய் உடன் இணைந்த அட்லி தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர இயக்குனராக வளர்ந்தார்.

சிறந்த கமர்சியல் இயக்குனராக தன் திரைப்படங்களை உருவாக்கி பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் இயக்குனர் அட்லியை சமூக வலைதளங்களில் பலர் மோசமாக விமர்சனம் செய்வதும் உண்டு. ஆனால் அவை அனைத்தையும் அட்லி கையாண்ட விதம் பலரது பாராட்டைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது அட்லியின் மனைவியான பிரியா அட்லி, இயக்குனர் அட்லியின் ஹேட்டர்ஸ்க்கு சிறப்பான பதில் அளித்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களோடு கலந்துரையாடிய பிரியா அட்லி ரசிகர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவர்களை மதித்து பதிலளித்து வந்தார். அந்த வகையில் இயக்குனர் அட்லியை வெறுப்பவர்கள் குறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எங்கள் மீது இன்னும் அதிக அன்பு கொண்டுள்ள அவர்களுக்கு நன்றி... அன்பை பரப்புவோம் என பதிலளித்துள்ளார்.

ப்ரியா அட்லியின் இந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அடுத்ததாக இயக்குனர் அட்லி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுடன் இணைய உள்ளார் என்ற தகவல்கள் சமீபத்தில் வெளியானது. விரைவில் அந்தத் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.