கொரோனா வைரஸின் பாதிப்பு அச்சுறுத்தி வந்தாலும் ஊரடங்கால் வணிகம் சார்ந்த விஷயங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினக்கூலியை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் அவதிக்கு ஆளாயினர். இப்படியிருக்கையில் அரிசி, காய்கறி, மாஸ்க் வழங்குதல் என தங்களால் முடிந்த உதவிகளை பிரபலங்கள் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவில், என்னுடைய நிதி வளங்கள் குறைந்தாலும் கடன் வாங்கியாவது உதவி செய்வேன். காரணம் என்னால் மீண்டும் சம்பாதிக்கமுடியும் என்பது எனக்குத் தெரியும். ஒன்றாக போராடுவோம். வாழ்க்கைக்கு நீங்கள் திரும்பி கொடுங்கள் என்று குறிப்பிட்டு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் பிரகாஷ்ராஜ். கடைசியாக தனுஷ் நடித்த அசுரன் படத்தில் நடித்திருந்தார்.