பாய்ஸ் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான இவர் காதலில் விழுந்தேன் படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதன் பிறகு மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற வெற்றி படங்களில் நடித்தார். சிறந்த நடிகரான இவர் சீரான பாடகரும் கூட. அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன் உள்ளிட்ட படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார்.
இந்த லாக்டவுனில் தனது மனைவி ஸ்ருதியுடன் சேர்ந்து பாடும் கியூட் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தனது மகளின் பெயரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார் நகுல். அதில், தனது மகளுக்கு அகிரா என்று பெயர் சூட்டிய விஷயம் குறித்து பதிவு செய்திருந்தார். திரையுலகை சேர்ந்த பலர் வாட்டர் பர்த் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். ஸ்ருதியும் வாட்டர் பர்த் மூலம் தான் அகிராவை பெற்றெடுத்துள்ளார். தனக்கு குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆன நிலையில் பிரசவம் குறித்து ஸ்ருதி புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார்.
அந்த போஸ்ட்டில் ஸ்ருதி கூறியிருப்பதாவது, அகிரா பிறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. நான் 32 வாரங்கள் கர்ப்பமாக இருந்தபோது நானும், நகுலும் எங்கள் நான்கு பூனைகளுடன் ஹைதராபாத்துக்கு காரில் சென்றது இன்னும் நம்ப முடியவில்லை. ஏன் ஹைதராபாத்?. ஏன் தனியாக?. எப்படி நீங்கள் இருவரும் சமாபளிப்பீர்கள்? என்று பலர் எங்களை கேட்டார்கள்.
அதற்கு இது தான் பதில். ஸ்வாதி தான் நாங்கள் இப்படி ஒரு பெரிய முடிவு எடுக்க ஒரு காரணம். அவரின் வகுப்புகளில் கலந்து கொண்டதன் மூலம் நிறைய கற்றுக் கொண்டோம். பல ஆண்டுகள் பழகியது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். அவரின் வகுப்புகளில் நான் நிறைய சிரித்தேன். கர்ப்பமாக இருக்கும் போதும், அதன் பிறகும் ஏற்படும் நல்ல மற்றும் மோசமான அனுபவங்கள் பற்றி கேட்டு கண்ணீர் வந்தது. நீங்கள் இல்லாமல் நாங்கள் சாங்டம் பர்த் சென்டருக்கு வந்திருக்க மாட்டோம். சாங்டம் பர்த் சென்டரில் பிரசவத்திற்கு உதவியாக இருந்த விஜயா மேடம் அருமையானவர். அவர் ஒரு wonder woman. குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி சென்னையில் பல மருத்துவர்களிடம் ஆன்லைன் மூலம் ஆலோசனை பெற முயற்சி செய்தோம். ஆனால் சிலர் 3 நிமிடம் கூட பேச விரும்பவில்லை. விஜயா மேடமோ சுமார் ஒரு மணிநேரம் வீடியோ கால் மூலம் எங்களிடம் பேசினார். நாங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளித்தார். அதுவும் ஒரு பிரசவம் பார்த்த கையோடு எங்களுடம் பேசினார்.
விஜயா மேடமிடம் பேசிய அன்று இரவே சாங்டம் பர்த் சென்டரில் தான் குழந்தை பெற்றுக்கொள்வது என்று நானும், நகுலும் முடிவு செய்தோம். 12 மணிநேரம் வலியால் துடித்தபோது விஜயா மேடம் தான் எனக்கு உதவி செய்தார், ஒரு குழந்தையை ஆறுதல் படுத்தும் தாய் போன்று நடந்தார் என்பதை புகைப்படங்களில் பார்க்கலாம். நான் வலியால் துடித்தபோது நீங்கள் சொன்ன அந்த அன்பான வார்த்தைகளை நான் எப்பொழுதுமே மறக்க மாட்டேன்.
அனைத்து பெண்களுக்கும் இது போன்ற மரியாதையான, நல்லவிதமான பிரசவ முறை கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அனைத்து பெண்களும், அவர்களின் கணவன்மார்களும் யாரோ சொன்னதை கேட்டு பின்பற்றாமல் ஆதாரத்துடன் கூடிய ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஸ்ருதி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த பெண்கள் வியந்து கமெண்ட் செய்துள்ளனர். மேலும் அகிராவின் புகைப்படத்தை விரைவில் வெளியிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் நெட்டிசன்கள். குழந்தையை பெற்றெடுக்கும் தருணத்தில் ஒரு பெண் மீண்டும் பிறக்கிறாள். அப்படிபட்ட பெண்மையை போற்றும் வகையில் அமைந்துள்ளது நகுல் பகிர்ந்த இந்த புகைப்படம்.