முற்போக்கு சிந்தனையோடு வளர்ந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை அடுத்தடுத்த படிகளுக்கு எடுத்துச் செல்லக்கூடிய எண்ணமும் திறமையும் கொண்ட இளம் இயக்குனர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் என்ற ஒரே திரைப்படத்தில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த மாரிசெல்வராஜ் தனது இரண்டாவது படமாக நடிகர் தனுஷுடன் இணைந்து தயாரிப்பாளர் எஸ்.தாணுவின் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் கர்ணன். தொடர்ந்து ஒடுக்கப்பட்டவர்களின் வலியை பிரதிபலிக்கும் விதமாக அவரது திரைப்படங்கள் பேசுகின்றன. சமூக மாற்றங்களை திரைப்படத்தின் வாயிலாக ஏற்படுத்த முடியும் என முனைப்போடு செயல்படுகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

இதற்கிடையே சமீபத்தில் வெளியான தேர்தல் முடிவுகளில் தமிழ்சினிமாவில் நடிகர்களாக இருக்கும் திரு உதயநிதி ஸ்டாலின் மற்றும் திரு விஜய் வசந்த் இருவரும் அவரவர் தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று சட்ட மன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் செல்ல இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் வாழ்த்தும் விதமாக மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்-

“திரைத்துறையில் இருந்து மக்கள் மன்றத்திற்கு செல்லும் மரியாதைக்குரிய சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் சகோதரர் விஜய் வசந்த் அவர்களுக்கும் என் வாழ்த்துக்களும் பிரியமும் உங்கள் வெற்றி பெற்றது போல உங்கள் மீதான எதிர்பார்ப்புகளும் வெற்றியடையட்டும்”

என பதிவிட்டுள்ளார். கர்ணன் திரைப்படத்தின் மூலம் இணைந்த தனுஷ்-மாரிசெல்வராஜ் கூட்டணி மீண்டும் ஒருமுறை இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது