ஏ வி ம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தமிழில் இயக்குனர் சரண் இயக்கத்தில் நடிகர் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஜெமினி. ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கிரண். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அஜித்குமாரின் வில்லன், உலகநாயகன் கமல்ஹாசனின் அன்பே சிவம், நடிகர் பிரசாந்தின் வின்னர் என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை கிரண். மேலும் சில திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் கௌரவ தோற்றத்தில் நடனமாடியுள்ளார்.

இதனையடுத்து தற்போது சகுனி, ஆம்பள, சர்வர் சுந்தரம் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை கிரண் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவற விட்டது குறித்து தெரிவித்துள்ளார்.இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை எழுதி நடித்த திரைப்படம் பாபா.

இத்திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடிகை மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். முன்னதாக இப்படத்திற்கு மனிஷா கொய்ராலாவுக்கு முன்பு நடிகை கிரண் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அந்த சமயத்தில் ஜெமினி திரைப்படத்தில் நடித்து வந்ததால் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பை தவற வைத்துள்ளதாக தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.