சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இதில் கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், மீனா, சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது.

லாக்டவுன் பிரச்சனையால் அண்ணாத்த படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டார்கள். 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக அண்ணாத்த ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. இதனால் திட்டமிட்டபடி நவம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது என்பது கடினமாகிவிட்டது. இந்த காரணத்தால் அண்ணாத்த படத்தை பொங்கலுக்கு பதிலாக அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ், பிரபல பாலிவுட் சேனல் ஒன்றிற்கு பேசுகையில், அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நிலுவையில் உள்ளது. இப்போதைக்கு படம் குறித்து எதுவும் பேச முடியாது. ஏனென்றால் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. எனவே, இதைப் பற்றி சிறிது நேரம் கழித்து பேசலாம். லீட் ரோலில் தான் நடிக்கிறேன். அண்ணன் தங்கை உறவை சுற்றியும் மற்ற அழகான கேரக்டர்கள் கொண்ட படமாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் திரை ரசிகர்கள்.