துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக கால் பதித்தவர் கார்த்திக் நரேன். இவரது இயக்கத்தில் அடுத்ததாக நரகாசூரன் திரைப்படம் உருவானது. சில காரணங்களால் இப்படம் ரிலீஸாகாமல் இருந்தது. இயக்கம் தவிர்த்து கண்ணாடி எனும் படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு அருண் விஜய் மற்றும் பிரசன்னா வைத்து மாஃபியா எனும் படத்தை உருவாக்கினார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் D43. தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜிவிபிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த பட்டாஸ் படத்தை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். க்ரைம் திரில்லரான இந்த படத்தில் ஷரஃபு மற்றும் சுஹாஸ் திரைக்கதை எழுதுகின்றனர்.

சமீபத்தில் படத்தின் பாடல் குறித்து பேசிய ஜிவி பிரகாஷ், D43 படத்திற்கு வேற லெவல் பாடல்கள் கம்போஸ் செய்து ரெடியாகிவிட்டன. பாடல்களை தனுஷ் மற்றும் கவிஞர் விவேக் எழுதியுள்ளனர் என்ற சுவையூட்டும் செய்தியை தெரிவித்திருந்தார்.

கொரோனா காரணத்தினால் அறிவிக்கப்பட்ட லாக்டவுனில் சினிமா சார்ந்த செயல்கள் அனைத்தும் மந்தமாகவே உள்ளது. திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளது. படப்பிடிப்புகள் ஏதும் இல்லாமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் கார்த்திக் நரேன் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். திரை விரும்பிகளான தனது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.

அப்போது பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். சைன்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் எப்போது படம் இயக்குவீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்க, விரைவில் எடுப்பேன். அதுவும் வெப் சீரிஸாக உருவாகவுள்ளது என்ற ருசிகர செய்தியை தெரிவித்தார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் கார்த்திக் நரேன் ரசிகர்கள். குறும்படங்கள் துவங்கி இன்று ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குனராக திகழும் கார்த்திக் நரேன் இதிலும் வெற்றி பெற வாழ்த்துகிறது நம் கலாட்டா.