துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக கால் பதித்தவர் கார்த்திக் நரேன். இவரது இயக்கத்தில் அடுத்ததாக நரகாசூரன் திரைப்படம் உருவானது. சில காரணங்களால் இப்படம் ரிலீஸாகாமல் இருந்தது. இயக்கம் தவிர்த்து கண்ணாடி எனும் படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு அருண் விஜய் மற்றும் பிரசன்னா வைத்து மாஃபியா எனும் படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், கிரிஸ்டோபர் நோலனின் டெனெட் படத்தின் ட்ரெய்லரிலிருந்து ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவு செய்திருந்தார். அதில் நரகாசூரன் ரிலீஸ் குறித்து ஒரு தகவலை வெளியிட்டார். நரகாசூரன் வெளிவரும் ஆனால், அது கொஞ்சம் நாடகத்தன்மையாக இருக்கும் என்ற டெனெட் திரைப்பட டயலாக்கை இணைத்துள்ளார். இதனால் நிச்சயம் படம் ரிலீஸாகும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் திரை விரும்பிகள்.

நரகாசூரன் படம் நேரடியாக OTT பிளாட்ஃபார்மில் ரிலீஸாகிறதா என்பது குறித்த செய்திகள் வெளியாகவில்லை. அரவிந்த் சாமி, ஸ்ரேயா, இந்திரஜித், சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் நடித்த இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. கார்த்திக் நரேன் அடுத்ததாக தனுஷ் வைத்து படத்தை இயக்கவிருக்கிறார். சத்ய ஜோதி நிறுவனம் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு GV பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.