தனது ஒவ்வொரு திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருபவர் நடிகர் கார்த்தி. கதை தேர்வில் மிகவும் சிறந்து செயல்பட்டு வருகிறார். கார்த்தி கைவசம் பொன்னியின் செல்வன் படம் உள்ளது. மணிரத்னம் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
கார்த்தி நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம் சுல்தான். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அதோடு சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2-ம் தேதி ரிலீசாக உள்ளது. ரெமோ திரைப்பட புகழ் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இந்த சுல்தான் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தன்னா நடித்துள்ளார். அதிரடி மாஸ் மசாலா பொழுதுப்போக்கு படமான இதில் ராமச்சந்திர ராஜு, லால் பால், நெப்போலியன் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் சுல்தான் படத்தின் ட்ரைலர் மற்றும் ப்ரோமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜாவும், பாடல்களுக்கான இசையை விவேக் - மெர்வினும் அமைத்துள்ளார்கள்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் கார்த்தி, தனது போட்டோ ஆல்பத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சென்னை அரசுப்பேருந்தில் தனது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதன் பிறகு சொந்த ஊரில் புளிய மரத்தில் தொங்கியபடி புகைப்படம் வெளியிட்டிருந்தார். கடைசியாக தனது மகனுக்கு கந்தன் என்று பெயர் சூட்டியது குறித்து பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி சிறு வயதில் தனது அண்ணனுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார். மேலும் மறக்கமுடியாத சில நினைவுகளையும் பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது எனது அண்ணனை வெறுப்பேற்ற ஒரே வழி, அவர் அணிந்திருக்கும் சட்டையை போலவே நானும் அணிந்து கொள்வேன். மீண்டும் அப்படி முயற்சி செய்ய ஆசையாக இருக்கிறது. நீங்களும் உங்கள் சகோதரர்களுடன் இப்படி உடை அணிந்தது உண்டா? என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.