தமிழில் ஜெயம் ரவி நடித்த தாம்தூம் படத்தின் மூலம் பிரபலமானவர் கங்கனா ரனாவத். தற்போது ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பதும் இவர்தான். ஹிந்தி சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூட சொல்லலாம். சமீப காலமாக பாலிவுட்டில் உள்ள நெபோட்டிசம் குறித்து பேசி வரும் கங்கனா ரனாவத், நடிகர் சுஷாந்தின் மரணத்திற்கு நீதி கேட்டும் வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை கங்கனா ரனாவத், அவ்வப்போது சில நிகழ்வுகளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தனது பழைய போட்டோ ஒன்றை பகிர்ந்து வைரலாக்கியுள்ளார். அதில் நெற்றியில் வெட்டுக் காயத்துடன் ரத்தம் சொட்ட காண்போரை பதற வைத்துள்ளது. மணிகர்ணிக்கா ஷுட்டிங்கின் போது நடந்த விபத்தில் எடுக்கப்பட்டது இந்த புகைப்படம். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் மணிகர்ணிக்கா. இந்தப் படத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருந்து நடிப்பிலும் அசத்தினார் கங்கனா ரனாவத்.
இந்தப் படத்தின் ஷுட்டிங் கடந்த 2017ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற போது, ஒரு மாத வாள் சண்டை பயிற்சிக்கு பிறகு வாள் சண்டை காட்சியாக்கப்பட்டது. அப்போது நடிகர் நிஹார் பாண்டியா வீசிய நிஜ வாள் நடிகை கங்கனாவின் நெற்றியை பதம் பார்த்தது. நெற்றியில் பட்ட அந்த காயத்திற்கு உடனடியாக சிகிச்சை பெற்றார் கங்கனா ரனாவத். மேலும் அந்த காயத்திற்கு 15 தையல் போடப்பட்டது.
அப்போதே அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இருப்பினும் காயமடைந்த பிறகும் படத்தில் இயற்கையாக இருக்கும் என அப்படியே பங்கேற்றார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் கங்கனா ரானவத். அதனை பார்த்த ரசிகர்கள் இப்போது நடந்துவிட்டதோ என பதறிவிட்டனர்.
கங்கனா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தலைவி. விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று குறித்த படமாகும். இதில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் பிரபலம் கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். இதன் ஒரே ஒரு கட்ட படப்பிடிப்பு மட்டும் மீதியுள்ளது. விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார். இந்த படம் ஓடிடி-ல் வெளியாகக்கூடும் என்று சமீபத்தில் வதந்தி கிளம்பிய நிலையில், தலைவி திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெளிவு படுத்தினர்.