கொரோனா நோயின் அச்சுறுத்தலால் ஒட்டு மொத்த நாடே முடங்கி போய் உள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுதும் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா நோய் தொற்று உள்ளது என காலையில் தவறான செய்தி வெளியானது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நானும் எனது குடும்பத்தினரும் இரண்டு வாரமாக தனிமையில் தான் இருக்கிறோம் என்பதை உலகநாயகன் கமல்ஹாசன் தெளிவு படுத்தினார்.

தற்போது அவரது ட்விட்டர் பதிவு அதிக கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இருக்கும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களும் இசைக்குழுவினரும், கோவில் திருவிழாக்களை நம்பி வாழ்வு நடத்துபவர்கள். அரசு அறிவித்திருக்கும் உதவித் திட்டங்களில் அவர்கள் பெயரையும் இணைத்துக் கொண்டால் வாழ்வாதாரமில்லா நிலையில், அவர்களும் கவலையின்றி பசியாறுவர் என்று பதிவு செய்துள்ளார்.