லைக்கா நிறுவனம் சார்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 ஷூட்டிங் சென்னை EVP ஃபிலிம் சிட்டியில் நடந்துவந்தது. இப்படப்பிடிப்பின்போது எதிர்பாராத நேரத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது. இந்த கிரேன் மானிட்டர் எனும் படப்பிடிப்புக் காட்சிகளைப் பார்க்கும் கூடாரம் மீது விழுந்தது. அந்தப் பகுதியில்தான் இயக்குநர் ஷங்கர், உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும் இருந்தனர். இந்த விபத்தில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, உதவி கலை இயக்குனர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது என மூன்று பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து நடிகர் கமல் இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். விபத்தில் பலியான அவர்களுக்கு ஒரு கோடி நிதியுதவி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மூவருக்கும் அஞ்சலி செலுத்திவிட்டு, பத்திரிக்கையாளர்களை சந்தித்த கமல் பேசுகையில், உயிரிழந்த மூவர் குடும்பத்தினருக்கும் ஒரு கோடி நிதி வழங்குகிறேன், உயிரிழந்தவர்களுக்கு இந்த இழப்பீடு போதாது, என் குடும்பத்தில் நிகழ்ந்த இழப்பாகவே இதை கருதுகிறேன். கிரேன் விபத்தில் இருந்து நான் நூலிழையில் உயிர் தப்பினேன், ரெண்டு அடி தள்ளி விழுந்திருந்தா, எனக்கு பதிலாக வேறு ஆள் இப்போது பேசியிருக்க கூடும் ' என்று அவர் கூறியுள்ளார்.