தமிழ் திரையுலகில் எதார்த்தமான படைப்புகள் மூலம் ரசிகர்களை ஈர்த்த இயக்குனர்களில் ஒருவர் விஜய் மில்டன். சிறந்த இயக்குனரான இவர் சீரான ஒளிப்பதிவாளரும் கூட. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு வீடியோக்கள் மற்றும் ஆறுதலான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் மில்டனும் தற்போதைய நிலை குறித்து பதிவு ஒன்றை செய்துள்ளார்.

அதில், சமூக பாதுகாப்புக்காக நாம் தனித்திருப்பதை அதீதமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் எண்ணங்களில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. தீண்டாமை குடும்ப பாதுகாப்பு என்ற போர்வையில் நம்முள் இறங்கிவிட்டது. மனிதர்களை மந்தைகள் போல் கூட்டமாக்கி பூச்சிமருந்து தெளிப்பதையும் சொந்த ஊர்களுக்கு திரும்ப விடாமல் கொட்டடியில் அடைப்பதையும் சரிதானென்று நினைக்க ஆரம்பித்து விட்டோம்.

ஏற்கனவே கயிறு கட்டியவன் கட்டாதவன் ம..புடுங்கியவன் பிடுங்காதவன் என வட்டம்போட்டுக்கொண்ட நாம் மேலும் சுருங்கி சுயநலமே பொதுநலம் என்றாகிக்கொண்டிருக்கிறோம். சகமனிதர்களை, ஏன் நண்பர்களை கூட அவ நம்பிக்கையோடு தூரத்தில் வைக்க நேரிட்டு விட்டது நம் பிள்ளைகளின் மனதில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என அச்சமாக இருக்கிறது. இந்த ஆரவாரமெல்லாம் அடங்கிய பிறகு என்றேனும் எங்கேனும் சாலை ஓரம் நாம் மயங்கிக்கிடந்தால் அப்படியே விட்டு விலகி ஒதுங்கிச்செல்வதுதான் social responsibility என அவர்களுக்கு போதித்துக்கொண்டிருக்கிறோம். சமூக இடைவெளி என்பது மனதுக்குள் மனிதருக்குள் நிரந்தரமாகிவிடுமோ என்று அச்சம் வருகிறது என விஜய் மில்டன் கூறியுள்ளார்.