தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் அறிவித்திருந்த நிலையில், தற்போது நயன்தாராவுடன் எப்போது திருமணம் என்பது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக ரசிகர்களுடன் தொடர்பு கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கும் நயன்தாராவுக்கும் எப்போது திருமணம் என்று எழுப்பிய கேள்விக்கு, "ரொம்ப செலவு ஆகும் ப்ரோ மேரேஜ் மற்ற எல்லாமே... அதனால் திருமணத்திற்காக பணம் சேர்த்து வருகிறேன் .கொரோனா வைரஸ் தொற்று முடியும் வரை காத்திருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் நடிகை நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாக உள்ளது. மேலும் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் விக்னேஷ் சிவனும் அடுத்ததாக காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இன்னும் சில தினங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடையவுள்ள நிலையில் விரைவில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு விக்னேஷ் சிவன் பதில் அளித்து இருப்பது தற்போது ட்ரெண்டாகி வருகிறது.