துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக கால் பதித்தவர் கார்த்திக் நரேன். இவரது இயக்கத்தில் அடுத்ததாக நரகாசூரன் திரைப்படம் உருவானது. சில காரணங்களால் இப்படம் ரிலீஸாகாமல் இருந்தது. இயக்கம் தவிர்த்து கண்ணாடி எனும் படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு அருண் விஜய் மற்றும் பிரசன்னா வைத்து மாஃபியா எனும் படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ஒரு நெகிழ்ச்சி சம்பவத்தை பகிர்ந்துள்ளார். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த சுசேன் (Suzanne Hoylaerts) என்பவர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசத்திற்காக வென்டிலேட்டர் பொருத்த முற்பட, நான் வாழ்ந்து முடித்தவள், இந்த வென்டிலேட்டரை இளம் தலைமுறைக்கு பயன்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார் சுசேன். இதையடுத்து அவர் நேற்று காலமானார். இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை பகிர்ந்துள்ள கார்த்திக் நரேன், அவரை கடவுள் என தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கவுள்ளனர்.