தமிழ் திரையுலகில் சிறந்த கமர்ஷியல் படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் ஹரி. சூர்யா வைத்து அருவா என்கிற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதமே துவங்கி இருக்க வேண்டும், ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

ஊரடங்கு நேரத்தில் திரைத்துறை சார்ந்த தயாரிப்பாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அதனால் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர். சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி தான் அடுத்து நடிக்கும் மூன்று படங்களில் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் சம்பளத்தை குறைத்துக்கொள்வதாக அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இயக்குனர் ஹரி தான் அடுத்து இயக்கும் அருவா படத்திற்காக பேசப்பட்டுள்ள சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கொரோனா பாதிப்பால் நம் திரையுலகம் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளது , நம்முடைய தயாரிப்பாளர் நன்றாக இருந்தால்தான் நம் தொழில் மறுபடியும் நல்ல நிலைக்கு திரும்பும். இந்த சூழலை மனதில் கொண்டு, நான் அடுத்ததாக இயக்கப்போகும் அருவா திரைப்படத்திற்கு என்னுடைய சம்பத்தில் 25% குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளேன் என கூறியுள்ளார். ஹரியின் இந்த முடிவிற்கு பல பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.