சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில், இந்தியன்-2 படப்பிடிப்பில் நேரிட்ட இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததோடு சில பேர் காயமடைந்தனர். விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீது 3 பிரிவுகளின் கீழ்வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஆப்பரேட்டர் ராஜனை போலீசார் தேடிவந்தனர்.

படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கிரேன் ஆபரேட்டர் ராஜனை நாசரேத் பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, விபத்து நடைபெற்றபோது படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் இத்திரைப்படத்தில், சித்தார்த், டெல்லி கணேஷ், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.