பிரபல தமிழ் நடிகையும் விஜய் டிவியின் பிக் பாஸ் போட்டியாளருமான நடிகை யாஷிகா சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். யாஷிகா ஆனந்த் அதிவேகமாக ஓட்டிய கார் சாலையின் தடுப்பில் மோதி கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகாவின் நெருங்கிய தோழி வள்ளிசெட்டி பாவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற நண்பர்களும் மோசமான காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பல்வேறு எலும்பு முறிவு காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை யாஷிகா ஆனந்திற்கு தொடர்ந்து பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அதிவேகமாக காரை ஓட்டிச்சென்று உயிர் சேதம் ஏற்படுத்திய குற்றத்திற்காக யாஷிகா ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் யாஷிகா ஆனந்த் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த் தீவிர சிகிச்சையில் இருக்கும் மருத்துவமனை புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் தனது உடல்நிலை குறித்து யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் தவிர்த்து எனக்காக பிராத்தனை செய்தவர்களுக்கும் நல விரும்பிகளுக்கும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்... உங்களது அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!!! என பதிவிட்டுள்ளார்.

மேலும் தனது உடல்நிலை பற்றி , இடுப்பு எலும்பு பகுதி மற்றும் வலது கால் பகுதியில் பல்வேறு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பிறகு ஓய்வு எடுத்து வருகிறேன். அடுத்த ஐந்து மாதங்களுக்கு என்னால் நிற்கவோ நடக்கவோ முடியாது. எந்த அசைவும் இல்லாமல் படுத்த படுக்கையாக இருக்கிறேன். என்னால் படுத்தபடி வலது இடது புறமாக திரும்ப கூட முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக என் முகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கடவுள் என்னை தண்டித்து விட்டார். ஆனால், நான் இழந்ததோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இது ஒன்றும் அத்தனை பெரிய பாதிப்பு இல்லை... எனவும் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் யாஷிகாவின் புகைப்படம் இதோ...

A post shared by Y A S H ⭐️🌛🧿 (@yashikaaannand)