வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ஆந்தாலஜி திரைப்படம் குட்டி லவ் ஸ்டோரி. இதில் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், வெங்கட் பிரபு, விஜய் மற்றும் நலன் குமாரசாமி இணைந்து இயக்குகிறார்கள். சில நாட்கள் முன்பு இதன் ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையவாசிகளை ஈர்த்தது.

வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் படம் குறித்து கூறியதாவது... எல்லோர் மனதிலும் எக்காலத்திலும் நீங்காது இடம்பிடித்திருப்பது காதல் கதைகள் தான். அப்படியான ஒரு காதல் கதையை தயாரிக்க வேண்டுமென மிக நீண்ட காலமாக நினைத்திருந்தேன். அந்த வகையில் மிக அழகானதொரு தயாரிப்பாக இப்படைப்பு அமைந்திருப்பது மனதிற்கு பெரும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது.

ஒரு ரசிகனாக இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோரின் படங்கள் எந்த வகை ஜானராக இருந்தாலும் அதில் வெளிப்படும் கவிதைத்தனத்தையும், அதிரவைக்கும் காட்சித்தொகுப்பையும், மிளிரும் உணர்வுக் குவியல்களையும் மனம்பொங்க ரசித்திருக்கிறேன். இவர்களுடன் இணைந்து இப்படைப்பில் பங்கேற்பதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். படத்தின் இறுதி வடிவத்தை வெகு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

தமிழின் பெரும் ஆளுமைகளான இப்பட இயக்குனர்களுடன் தனித்தனியான படைப்புகளில் பணிபுரிவீர்களா ? என்று கேட்டபோது... இப்படத்தில் பணிபுரியும் இயக்குனர்கள் அனைவருமே தமிழ் சினிமாவை தங்கள் படைப்புகள் மூலம் ஒரு படி முன்னெடுத்து சென்றவர்கள். தங்களுக்கான தனி முத்திரையை உருவாக்கி வைத்திருப்பவர்கள் அவர்களுடன் தனியான படங்களில் பணிபுரிய வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் எப்போதும் ஆவலுடன் காத்திருக்கிறது.

இந்நிலையில் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் கௌதம் மேனன் இயக்கவிருக்கும் படத்தில் நடிகை அமலா பால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. முதல் முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் அமலா பாலுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

தற்போது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோஷ்வா இமைபோல் காக்க, மூக்குத்தி அம்மன், சுமோ ஆகிய படங்கள் தயாரிப்பு நிலையின் வெவ்வேறு கட்டங்களில் இயங்கி வருகிறது. மேலும் சில படைப்புகள் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது. வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கடந்த வருடம் வெளியான எல் கே ஜி, கோமாளி, பப்பி, எனை நோக்கி பாயும் தோட்டா படங்கள் அனைவரது பாராட்டையும் பெற்று பெரு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.