கடந்த 25-ஆம் தேதி நள்ளிரவில் நண்பர்களோடு மாமல்லபுரத்தின் ஈசிஆர் சாலையில் அதிவேகமாக காரில் பயணம் செய்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கினார். மல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது நடிகை யாஷிகா ஆனந்தின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த தடுப்பு சுவற்றில் மோதி பின்னர் நிலைதடுமாறி சாலையின் அருகில் இருந்த குழியில் கவிழ்ந்து விழுந்து, விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்தின் நெருங்கிய தோழியான வள்ளிசெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த பவானியின் வயது 28. காரை அதிவேகமாக ஓட்டி வந்த நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடைய இரண்டு நண்பர்களும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது நடிகை யாஷிகா ஆனந்த் உடல்நிலை குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. யாஷிகா ஆனந்தின் சகோதரியான ஓசின் ஆனந்த், யாஷிகா ஆனந்த் உடல்நிலை குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். கடவுளின் அருளால் யாஷிகா சுயநினைவு திரும்பியுள்ளார். விபத்தில் ஏற்பட்ட பல எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சைகள் முடிவடைந்துள்ளன. உங்கள் அனைவரது பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி!!! நீங்கள் தொடர்ந்து அவளுக்காக பிரார்த்தனைகளை செய்வீர்கள் என்று நம்புகிறேன் .அடுத்த சில நாட்கள் மிகவும் கடினமானது விரைவில் யாஷிகா மனதளவிலும் ஆரோக்யத்திலும் மீண்டு வருவதற்கும் உங்கள் அனைவரது ஆதரவும் பிரார்த்தனைகளும் வேண்டும். யாஷிகா மீண்டும் திரும்பி வருவதற்கு உங்களது ஆதரவும் நிச்சயமாக மருத்துவர்களின் உதவியும் இல்லாமல் இது சாத்தியமாகாது என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

நடிகை யாஷிகா ஆனந்த் மீது காரை அதிவேகமாக ஓட்டியது, விபத்துக்குள்ளாகியது மற்றும் பவானியின் உயிரிழப்பு உள்ளிட்ட 3 பிரிவுகளின் வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.