மலையாள திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது தென்னிந்தியாவில் ஆகச் சிறந்த நடிகையாக உயர்ந்து நிற்கிறார் நடிகை மஞ்சுவாரியார். கண்ணெழுதி பொட்டும் தொட்டு என்ற மலையாள திரை படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது பெற்ற மஞ்சு வாரியர் தனது சிறந்த நடிப்பால் பிலிம்பேர் மற்றும் கேரள மாநில விருதுகள் என பல விருதுகளை பெற்றுள்ளார்.

1999 ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணெழுதி பொட்டும் தொட்டு திரைப்படத்திற்கு பிறகு மலையாள நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்ட மஞ்சுவாரியர் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். பிறகு 2014 ஆம் ஆண்டு ரீ என்ட்ரி கொடுத்த மஞ்சு வாரியர் நடித்த HOW OLD ARE YOU திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான 36 வயதினிலே திரைப்படத்தில் நடிகை ஜோதிகா நடித்தது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து மஞ்சுவாரியர் நடித்த அனைத்து மலையாள திரைப்படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மஞ்சுவாரியர் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

இந்த ஆண்டு மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து இவர் நடித்து வெளிவந்த THE PRIEST திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அடுத்ததாக கடந்த ஏப்ரல் மாதம் மஞ்சுவாரியர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த த்ரில்லர் திரைப்படமான சதுர்முகன் திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

சமீப காலமாக சமூக வலைதள பக்கங்களில் முன்னணி பிரபலங்களின் பெயரில் போலி கணக்குகள் துவங்கப்பட்டு பரவி வருவதை நாம் பார்க்கிறோம். அந்த வகையில் நடிகை மஞ்சுவாரியரின் பெயரிலும் ஒரு போலி கணக்கு துவங்கப்பட்டு பரவி வருவதை கண்ட நடிகை மஞ்சுவாரியர் அதுகுறித்து பகிர்ந்துள்ளார்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டேட்டஸில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து “இது போலியான கணக்கு இது என்னுடையது அல்ல” என தெளிவுபடுத்தியுள்ளார். நடிகை மஞ்சுவாரியரின் பெயரில் போலி கணக்கு துவங்கப்பட்டு பரவி வந்த நிலையில் தற்போது நடிகை மஞ்சுவாரியரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.