17 வயது சிறுமியை நடுரேட்டில் நிர்வாணப்படுத்திய இளைஞர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகேயுள்ள சவ்ரி நகரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, சகோதரர்களான கவுதம், முகேஷ் ஆகிய இருவரும், சிறுமியை பின் தொடர்ந்து சென்று, ஆபாசமாகப் பேசியும், தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளனர். இதனால், அழுதுகொண்டே வீடு திரும்பிய சிறுமி, தனது பெற்றோர்களிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார்.

இது குறித்து, அந்த இளைஞர்கள் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த 2 இளைஞர்களையும் அழைத்து போலீசார் எச்சரித்தும், அறிவுரை கூறியும் அனுப்பி உள்ளனர்.

இதனையடுத்து, வீடு திரும்பிய இளைஞர்கள் 2 பேரும், சிறுமியைப் பழிவாங்க நினைத்தனர். இதனையடுத்து, சிறுமி வரும்போதும், போகும்போதும் இன்னும் மோசமாக ஆபாசமாகப் பேசி, சிறுமியைத் தகாத வார்த்தைகளைச் சொல்லி நாள் தோறும் திட்டி உள்ளனர். இந்த சம்பவம் தினந்தோறும் தொடர்ந்ததால், மனமுடைந்த சிறுமி, மீண்டும் தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனால், அவர்கள் மீது மீண்டும் புகார் அளிக்கத் தனது தந்தையுடன் அந்த சிறுமி காவல் நிலையம் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவர்கள் இருவரையும் வழிமறித்த அந்த இளைஞர்கள், சிறுமியின் தந்தையைக் கீழே தள்ளிவிட்டு, சிறுமியின் ஆடைகளை நடுரோட்டிலேயே கலைத்து நிர்வாணப்படுத்திவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர்.

இதனால், மேலும் அதிர்ச்சியடைந்த சிறுமி, அதையும் மீறி அந்த இளைஞர்கள் மீது மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இளைஞர்கள் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் தினந்தோறும் ஒரு பலாத்கார சம்பவம், அரங்கேறி வருவது சக பெண்கள் மத்தியில் பீதியையும், ஒரு வித அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.