போலீசார் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில், அது கொலையா? தற்கொலையா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூடம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பூபத் என்னும் காவலர், அங்குள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இது தற்கொலை தான் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிவித்தனர்.

ஆனால், தூக்கில் தொங்கிய காவலர் பூபத் உடலில் சில காயங்கள் இருந்ததாக, அவரது சகோதரர் கவுலால் குற்றம்சாட்டி உள்ளார். இதனால், இது கொலையா? தற்கொலையா என்று போலீசார் குழம்பிப்போய் உள்ளனர். அத்துடன், இது தொடர்பாக மீண்டும் விசாரணையை போலீசார் தொடங்கி உள்ளனர்.

மேலும், உயிரிழந்த காவலரைக் கடைசியாக தொலைப்பேசியில் அழைத்துப் பேசியவர் யார், அவர் இறுதியாக விசாரித்த வழக்குகள் குறித்தும், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.