உசிலம்பட்டி அருகே பணம் கேட்டு தாயை மகன் அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை உசிலம்பட்டி அடுத்த பெருங்காமநல்லூரைச் சேர்ந்த ஜோதியம்மாள், கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு ஈஸ்வரன், முத்துப்பாண்டி என்ற 2 மகன்களும், ரேவதி என்ற மகளும் உள்ள நிலையில், 3 பேரும் திருமணம் ஆன நிலையில், அவரவர் குடும்பத்துடன் தனித் தனியாக வசித்து வருகின்றனர்.

தனியாக வசித்து வரும் ஜோதியம்மாளுக்கு, மாதம் மாதம் ஓய்வூதியம் வரும் நிலையில், கடன் பிரச்சனையால் அவதிப்பட்ட மகன் முத்துப்பாண்டி, தாயாரிடம் போய் கடனை அடைக்கப் பணம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர் பணம் இல்லை என்று சொல்லவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.இதனால், ஆத்திரமடைந்த முத்துபாண்டி, அருகில் கிடந்த உலக்கையால், தாயைத் தாக்கியுள்ளார். இதில், படுகாயங்களுடன் சுருண்ட விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து விரைந்து வந்த சேடபட்டி போலீசார், வழக்குப் பதிவு செய்து, முத்துபாண்டியை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனிடையே, பணம் கேட்டு தாயை, மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.