“ரேப் நடந்த பிறகு வா”என்று கூறி புகாரை வாங்காமல் போலீசார் பெண்ணை திருப்பி அனுப்பி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அந்த கயவர்களாலேயே எரித்து கொலை செய்யப்பட்டார்.

அந்த ரணம் ஆறுவதற்குள், அதே பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகப் பெண் ஒருவர் கொடுத்த புகாரை, போலீசார் வாங்காமல், “பாலியல் பலாத்காரம் செய்த பிறகு வா” என அலட்சியமாக கூறி திருப்பி அனுப்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதிக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன், மருந்து வாங்கக் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது, அவரை வழிமறித்த 3 பேர், அப்பெண்ணின் ஆடைகளைக் களைத்து, கட்டியணைத்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.

அவர்களிடம் எப்படியோ போராடி மீட்டு வந்த பெண், அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் அளித்துள்ளார்.

அப்போது, புகாரை வாங்க மறுத்த போலீசார், “பாலியல் பலாத்காரம் செய்த பிறகு வா” என்று கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பெண் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அந்த பெண்ணை அங்குள்ள போலீசார் தாக்கியும், மிரட்டியும் அனுப்பியதாகப் பாதிக்கப்பட்ட பெண் தற்போது குற்றம்சாட்டி உள்ளார்.

இதனையடுத்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர்கள் தினமும் தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கவலைத் தெரிவித்துள்ளார். தற்போது, இந்த விவகாரம், உத்தரப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.