சிறுமியின் ஆபாச படத்தைப் பரப்பிய விவகாரத்தில் முதல் நபர் கைது செய்யப்பட்டுள்ளதால், மீதமுள்ள 2999 பேர் பீதியடைந்துள்ளனர்.

இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தில், இதுபோன்ற குற்றச் சம்பவத்தைத் தடுக்கும் முயற்சியில் தமிழக போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகக் குற்றங்கள் நடைபெற ஒரு வகையில் காரணமாக இருக்கக்கூடிய ஆபாச படங்கள் பதிவேற்றம் செய்வோர்களையும், பதிவிறக்கம் செய்வோர்களையும் கைது செய்ய போலீசார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, தமிழ்நாட்டில் ஆபாச படம் பார்த்தவர்கள் மற்றும் அதனை எடுத்தவர்கள் தொடர்பான விபரங்கள் சேகரித்து, சுமார் 3 ஆயிரம் பேர் கொண்ட பட்டியலை போலீசார் தயாரித்துள்ளனர். இதில், உள்ளவர்கள் வரிசையாகக் கைது செய்யப்படுவார்கள் என்றும் கடந்த வாரம் ஏ.டி.ஜி.பி. ரவி, அதிரடியாக அறிவித்தார்.

அதன்படி, திருச்சியில் முதல் நபராக 43 வயதான கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி பாலக்கரை காஜா பேட்டையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் 150 பேர்கள் கொண்ட ஒரு வாட்ஸ்ஆப் குழுவை நடத்தி வருகிறார். அதில், அவ்வப்போது ஆபாச படத்தை அவர் பரப்பி வந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சிறுமிகளின் ஆபாச வீடியோகளை, தனது வாட்ஸ்ஆப் குழுவில் பரப்பி உள்ளார். இந்த தகவல் போலீசாரின் கவனத்திற்குச் சென்றுள்ளது.

இதனையடுத்து, கிறிஸ்டோபர் அல்போன்ஸை கண்காணித்து வந்த போலீசார், அவரை தற்போது கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், அவருக்குத் திருமணமாகி குழந்தைகள் இல்லை என்பதும், அவர் ஏ.சி.மெக்கானிக்காக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

அத்துடன், அவரின் வாட்ஸ்ஆப் குழுவில் உள்ள 150 உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். அவர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே, தமிழ்நாட்டில் ஆபாச படம் பார்த்தது தொடர்பாக சுமார் 3 ஆயிரம் பேர் பட்டியல் ரெடியாக இருப்பதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் நபராகத் திருச்சியில் ஒருவர் கைதாகி உள்ளது, மீதமுள்ள 2999 பேரின் வயிற்றில் புலியைக் கரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.