காதல் மனைவியை வெறித்தனமாக கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியைச் சேர்ந்த 32 வயதான நிசார், ஏற்கனவே தனது முதல் மனைவியைப் பிரிந்த நிலையில், 2 வதாக 24 வயதான அசினா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு நன்றாக வாழ்ந்து வந்த இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், மதுவுக்கு அடிமையான நிசார், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், கணவன் - மனைவி இருவருக்குள்ளும் தினமும் பிரச்சனை எழுந்துள்ளது.

எப்போதும் போல், நேற்று இரவும் நிசார் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன் - மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. இதனையடுத்து, கதவைச் சாத்திக்கொண்டு கணவன் - மனைவி இருவரும் உள்ளே சென்றுள்ளனர். கதவு சாத்தப்பட்டு, வெகு நேரமானதால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்துக்கொண்டே வீட்டினுள் சென்றுள்ளனர்.

அங்கு, அசினா கத்தியால் பல இடங்களில் வெறித்தனமாக குத்தப்பட்டு உயிரிழந்து காணப்பட்டுள்ளார். மேலும், நிசார் ரத்த வெள்ளத்தில், உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவர் அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நிசார் போதைக்கு அடிமையானதால், இந்த வெறித்தனமான கொலை நடந்துள்ளதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, மதுவுக்கு அடிமையான கணவன், காதல் மனைவியை வெறித்தனமாக குத்திக்கொன்ற சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.