டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிக்டாக்கில் சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவு செய்வதில் பெயர் போனவர் ரவுடி பேபி சூரியா. சமீப காலமாகவே, இவர் தொடர்ந்து புதிய புதிய சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

திருப்பூர் அய்யம்பாளையம் அடுத்த சபரிநகரைச் சேர்ந்த “சுப்புலட்சுமி” தான், டிக்டாக்கில் தன் பெயரை “சூர்யா” என்ற பெயரில் தொடர்ந்து அலப்பறைகள் செய்து சேட்டையான வீடியோக்களை வெளியிட்டு, அதன் மூலம் பிரபலமானார்.

சமீபத்தில் சிங்கப்பூர் சென்றிருந்த ரவுடி பேபி சூர்யா, கொரோனா ஊரடங்கு காரணமாகவே, அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்த நிலையில், கடந்த 16 ஆம் தேதி ஊர் திரும்பினார். திருப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்த அவரை பார்த்த அக்கம் பக்கத்தினர், கொரோனா பீதியால் போலீசாருக்கும் சுகாதாரத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அங்கு வந்த போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், ரவுடி பேபி சூர்யாவை மருத்துவமனை அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், “எனக்கு கோவையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அங்கு தனக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்பு தான் என்னை அதிகாரிகள் அனுப்பி வைத்தார்கள்” என்றும் கூறி, போலீசாருடனும், சுகாதாரத் துறை அதிகாரிகளுடனும் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும், 108 ஆம்புலன்சில் ஏற மாட்டேன் என்றும், இருசக்கர வாகனத்திலேயே வருவதாகவும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தொடர்ந்து அலப்பறைகளையும் செய்து வந்தார்.

அதேபோல், “நான் ஏசி அறையிலேயே இருந்துவிட்டேன். தமிழகத்தில் அடிக்கும் வெயிலில் இவர்களிடமிருந்து தனக்கு கொரோனா பரவி விடும் என்று பயமாக

இருக்கிறது. இதனால், எனக்கு அரசு மருத்துவமனையில் தனி அறை ஒதுக்கித் தர வேண்டும், 3 வேளைக்கும் உயர் தரமான உணவு வேண்டும்” என்றும், அதிகாரிகளைத் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.

பின்னர், அவருக்குத் திருப்பூர் ரயில் நிலையம் அழைத்துச் சென்ற சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக சூர்யா வீட்டின் முன்பு தனிமைப்படுத்தப்பட்டவர் உள்ள வீடு என அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.

இது தொடர்பாக, செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் மீது அவதூறு பரப்பும் விதமாகவும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டார், ரவுடி பேபி சூர்யா. .

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த செய்தியாளர் அளித்த புகாரின் பேரில், வீரபாண்டி போலீசார் ரவுடி பேபி சூர்யா மீது, “ஆபாசமாகப் பேசுதல், அவதூறு பரப்புதல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு” செய்தனர்.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரவுடி பேபி சூர்யா, இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப்பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூரியா திருப்பூரில் உள்ள தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம், இணையத்தில் வைரலாகி வருகிறது.