மிக்ஸியை விற்று மது குடித்த கணவனை, மனைவி அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மீனாட்சி நகர் பகுதியைச் சேர்ந்த வேங்கடேசன் - உமாதேவி தம்பதியினர் அங்குள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். அப்போது, வேலை செய்யும் இடத்தில், வெங்கடேசனுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் வீட்டிலிருந்தபடியே, சிகிச்சை பெற்று வந்தார்.

இதனையடுத்து, உடல் நலம் பூரணமாகக் குணமடைந்த நிலையில், அவர் வேலைக்குச் செல்லாமல் மதுப் பழக்கத்திற்கு அடிமையானதாகத் தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி வீட்டிலிருந்த மிக்ஸியை விற்று வெங்கடேசன், மது குடித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மனைவி உமாதேவி, வீட்டிலிருந்த கட்டையால் கணவனைத் தாக்கி உள்ளார். இதில், ரத்த காயங்களுடன் மயங்கி விழுந்த வெங்கடேசன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து, கணவன் உயிரிழந்ததை யாரிடமும் சொல்லாமல், கணவனை அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, தனது கணவர் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டதாகக் கூறி, சிகிச்சை அளிக்கும்படி கூறியுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், வெங்கடேசன் கட்டையால் தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனையடுத்து, கணவனை மருத்துவமனையில் அட்மீட் செய்த மனைவி மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அவரை அழைத்து போலீசார் விசாரித்துள்ளனர்.

அப்போது, மிக்ஸியை விற்று மது குடித்த கோபத்தில், கட்டையால் கணவரை அடித்ததாகவும், அதில் அவர் உயிரிழந்ததையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, உமாதேவியை போலீசார் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.