காவல்நிலையம் எதிரே தன் கள்ளக்காதலியைத் தாக்கிய காவலர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரத்திலும் பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி, அந்த பகுதியில் உள்ள வீரவநல்லூரில் காவலராக பணியாற்றி வருகிறார்.

காவலர் தட்சிணாமூர்த்தி, இதற்கு முன்னதாக கடையம் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது, காவல் நிலையம் எதிரே வசித்து வந்த விதவை பெண் முப்புடாதி சக்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, தட்சிணாமூர்த்தி வீரவநல்லூருக்கு மாறிவந்த பிறகு, முப்புடாதி சக்தி வேறு ஒருவருடன் பழகியதாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த தட்சிணாமூர்த்தி, அந்த பெண்ணை கண்டித்துள்ளார். ஆனால், அவர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.

இதனால், கடும் ஆத்திரமடைந்த தட்சிணாமூர்த்தி, நேராகக் கடையம் காவல் நிலையம் எதிரே உள்ள அந்த பெண் வீட்டிற்குச் சென்று சராமாரியாக தாக்கி உள்ளார். இதில், வலி தாங்க முடியாமல், அந்த பெண் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்துள்ளார். ஆனாலும் விடாமல் துரத்தி வந்த அவர், கோபம் தாங்காமல், அந்த பெண்ணை கத்தியால் குத்தியதாகத் தெரிகிறது.

இதில், அப்பெண்ணுக்குத் தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, கடையம் போலீசார் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், பெண்ணை தாக்கிய காவலர் தட்சிணாமூர்த்தியைக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.