மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்றுவிட்டு ராணுவ வீரர் நாடகமாடியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன், ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்குக் கடந்த சில வருடங்களுக்கு ரேணுகா என்பவருடன் திருமணமான நிலையில், இவர்களுக்கு யோகி ஸ்ரீ மற்றும் தான்யா ஸ்ரீ ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

குஜராத்தில் மாநிலத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கி, ராணுவத்தில் பணியாற்றி வந்த நாகேந்திரன், கடந்த 27 ஆம் தேதி தனது மனைவியின் பெற்றோருக்கு போன் செய்துள்ளார். அப்போது, “வீட்டில் சிலிண்டர் வெடித்து ரேணுகா தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக” தெரிவித்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த ரேணுகாவின் பெற்றோர், குஜராத் சென்று அங்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளனர். இதில், ரேணுகா தற்கொலை செய்துகொண்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகளைப் பார்க்கச் சென்றபோது, “அப்பா தான், அம்மா மேல் தீ வைத்துக் கொளுத்தியதாக, மகள் யோகி ஸ்ரீ தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ரேணுகாவின் பெற்றோர், திருவண்ணாமலை திரும்பியதும், மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் நாகேந்திரன் மீது புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

இதனிடையே, ராணுவ அதிகாரியே, மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்றுவிட்டு, நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.