பட்டப்பகலில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் 2 பேர் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சியைச் சேர்ந்த கோபியும், அவரது நண்பர் சிவாவும், இன்று பட்டப்பகலில் திருவள்ளூர் அடுத்த சுங்குவார்சத்திரத்திலிருந்து மப்பேடு நோக்கி, இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென்று மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், இருவரையும் துரத்தி உள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த கோபியும், சிவாவும் உயிர் பயத்தில் மின்னல் வேகத்தில் பறந்துள்ளனர்.

இந்நிலையில், மப்பேடு அருகே வந்துகொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டை வீசி உள்ளனர். இதில், நிலை தடுமாறி இருவரும் கீழே சரிந்து விழுந்துள்ளனர்.இதனையடுத்து, அந்த மர்ம நபர்கள் தாங்கள் கொண்டு வந்த அருவாள் மற்றும் கத்தியால் கண் இமைக்கும் நேரத்தில் இருவரையும் கொடூரமாகத் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர்கள் இருவரும், சம்ப இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த போலீசார், இருவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, பட்டப்பகலில் வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் 2 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.