நடிகை பறவை முனியம்மாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் விக்ரம் நடித்த “தூள்” உள்ளிட்ட பல படங்களில் நடித்ததின் மூலம், நாட்டுப்புற பாடகி பறவை முனியம்மா பிரபலமானார். இதனையடுத்து, பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் டி.வி.யில் சமையல் நிகழ்ச்சியில் தோன்றிய அவர், கடந்த சில மாதங்களாக வாய்ப்புகள் இல்லாத நிலையில், சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றார்.

கடந்த பல மாதங்களாக வறுமையில் வாடிய அவர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், தீபாவளிக்கு ஊருக்குச் சென்ற நடிகர் அபி சரவணன், பறவை முனியம்மாவை நலம் விசாரிக்க, அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு, அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு, பின்பு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை அபி சரவணன், மீண்டும் உடல் நலம் விசாரிக்கப் பறவை முனியம்மா வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, அவரது உடல் நலம் மேலும் மோசமடைந்த நிலையில் காணப்படவே, அவரை உடனடியாக மீட்டு, மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அங்கு, அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பறவை முனியம்மா மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் காணப்படுவது, பார்ப்பதற்குப் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, பறவை முனியம்மாவுடன் நடித்த நடிகர் நடிகர்கள் பலரும், நடிகர் அபி சரணவனுக்கு போன் செய்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.