உச்ச நீதிமன்றத்தின் 47 வது தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டே இன்று பதவியேற்றார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்யின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் 47 வது தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டே இன்று காலை 9.30 மணிக்கு முறைப்படி பதவியேற்றார். அவருக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

நீதிபதியான சரத் அரவிந்த் பாப்டே, வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி வரை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகிப்பார். இவர், அயோத்தி நிலம் வழக்கு, தனிமனித சுதந்திரம் உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு அளித்திருக்கிறார்.

குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தில் 21 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய இவர், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றியிருக்கிறார். மேலும், கடந்த 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியானார் என்பது குறிப்பிடத்தக்கது.