பெண்ணை காதலிக்க வற்புறுத்திக் கத்தி முனையில் மிட்டிய இளைஞரைப் பொதுமக்கள் புரட்டி எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பட்டரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார், அப்பகுதியில் உள்ள சிக்கரசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜனனி என்ற இளம் பெண்ணை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காதலித்ததாகத் தெரிகிறது.

இதனையடுத்து, இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்துள்ளனர். பின்னர், சில நாட்கள் கடந்த நிலையில், ஜனனியை அவ்வப்போது பின்தொடர்ந்து சென்று, சிவக்குமார் மீண்டும் காதலிக்க வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், ஜனனி காதலை ஏற்க மறுத்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த சிவக்குமார், இன்று காலைபண்ணாரி - சத்தியமங்கலம் சாலையில் உள்ள குளத்துப்பிரிவு பகுதியில் பேருந்துக்காகக் காத்திருந்த ஜனனியிடம் போய் தகறாரில் ஈடுபட்டுள்ளார். அப்போதும், ஜனனி காதலை ஏற்காமல் பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால், விரக்தியடைந்த அவர், தன்னை காதலிக்காவிட்டால், குத்தி கொன்றுவிடுவதாகக் கூறி, கத்தி முனையில் அவரை மிரட்டியுள்ளார்.

இதனால், அங்கே பேருந்துக்காக வந்த பொதுமக்கள் இதனை நேரில் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, சிவக்குமாரிடம் பேச்சுக் கொடுத்தபடியே, அவரை மடக்கிப் பிடித்து அவரிடமிருந்து கத்தியை பிடுங்கி, தர்ம அடி கொடுத்தனர். இதனையடுத்து, சிவக்குமாரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, கத்தி முனையில் பெண்ணை காதலிக்க வற்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.