ராஜஸ்தானில் பேருந்தும் - லாரியும் மோதிக்கொண்டதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பைகானார் மாவட்டம் துன்கர்கா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து சென்றுகொண்டிருந்தது.

அப்போது, அதே வழியில் வேகமாக வந்த லாரி, பேருந்தின் மீது திடீரென்று மோதியுள்ளது. இதில், பேருந்து சாலையின் அருகே தூக்கி வீசப்பட்டது. அத்துடன், பேருந்தில் பயணம் செய்த சுமார் 10 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு, அவசர அவசரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

இந்த கோர விபத்து குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்தில் முற்றிலும் உருக்குலைந்த பேருந்தை, ராட்சத எந்திரங்கள் மூலம் போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர். இதனால், அந்த பகுதியில் பல மணி நேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டன.