புஷ்பவனம் குப்புசாமியின் மகள் மாயமாகி உள்ளதால், அவரை கண்டுபிடித்து தார போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் மிகவும் பிரபலமானவர்புஷ்பவனம் குப்புசாமி. அதன்பிறகு, சினிமாவில் நிறையப் பாடல்கள் பாடினார். தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து, மேலும் பிரபலமானார்.

இந்நிலையில், புஷ்பவனம் குப்புசாமி தனது மனைவி அனிதா குப்புசாமி மற்றும் அவரது 2 மகள்களுடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகிறார்.

அவருடைய மகள் பல்லவி, மருத்துவம் படித்து வந்தார். இதனிடையே, நேற்று இரவு வீட்டில் இருக்கும் போது, மகள்கள் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், கோபப்பட்ட பல்லவி, வீட்டிலிருந்த காரை எடுத்துக்கொண்டு வேகமாக எங்கையோ சென்றதாகத் தெரிகிறது. ஆனால், தற்போது வரை அவர் வீடு திரும்பவில்லை. அவரது தொலைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.

இதனால், பயந்துபோன புஷ்பவனம் குப்புசாமி, தனது மகளைக் காணவில்லை என்றும், கண்டுபிடித்துத் தருமாறும், அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பல்லவி பயன்படுத்திய செல்போன் கடைசியாகக் காட்டிய டவரை வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, பல்லவி கோபத்தில் தோழிகள் வீட்டிற்குச் சென்றிருக்கலாம் என்றும் அவரது நட்பு வட்டத்தில் கூறப்படுகிறது.