புதுச்சேரியில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன், அப்பகுதியில் பிரபல ரவுடியாக இருந்துவந்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, புதுச்சேரி காவல் நிலையத்தில், பாண்டியன் மீது ஏராளமான குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன.

இந்நிலையில் அரியாங்குப்பம் பகுதியில் உள்ள பாரதி விளையாட்டு மைதானத்தில் தனது நண்பர் ஒருவருடன் பாண்டியன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் பாண்டியன் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி உள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். அப்போதும், அந்த கும்பல் விடாமல் விரட்டிச் சென்று, ரவுடி பாண்டியனை ஓட ஓட விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த பாண்டியன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.

இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலை செய்து தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். அத்துடன், இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே, ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.