விஷம் குடித்து உயிர் பிழைத்த இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அல்லா கோயில் தெருவைச் சேர்ந்த 28 வயதான நாகேந்திரன், திருமணம் ஆகாமலும், வேலை இல்லாமலும் கடும் மன உலைச்சலில் காணப்பட்டுள்ளார்.

இதனால், கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்த அவர், நேற்று முன் தினம் வீட்டிலிருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 2 நாட்களாக அனுமதிக்கப்பட்ட அவர், உயிர் பிழைத்தார். இதனிடையே, மருத்துவமனையில் அவருக்குத் துணையாக இருந்த அவரது தாயார், வீட்டிற்கு உணவு சமைத்துக் கொண்டுவரச் சென்றுள்ளார்.

அப்போது, மருத்துவமனையை விட்டு வெளியேறிய அவர், அங்குள்ள சுடுகாட்டிற்குச் சென்று, அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து சென்ற போலீசார், அவரது பையிலிருந்த செல்போனை வைத்து, அவர் யார் என்பதைக் கண்டுபிடித்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் தான், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அவர் விஷம் குடித்து உயிர் பிழைத்தார் என்பதும், மறுநாளே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த துயர சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.