பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததில் நண்பர்களுக்குள் மோதல் ஏற்பட்டதில் ஒருவர் அடித்துகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், 2 நாட்களுக்கு முன்பு வடலூரில் கடைக்குச் சென்றுவிட்டு, தனது நண்பர் சுரேந்திருடன் வீடு திரும்பி உள்ளார். அப்போது நெய்வேலி சாம்பல் ஏரி பகுதியில் வந்துகொண்டிருக்கும்போது, அங்கு, 5 இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்துகொண்டு மது அருந்திக்கொண்டிருந்தனர்.

இதனைப் பார்த்த அந்த பெண், அவர்களைப் பார்த்தும் பார்க்காதது போல், வேகமா நடக்கத்தொடங்கினார். அப்போது, மது போதையிலிருந்த பிரகாஷ், சிவபாலன், ராஜதுரை, கார்த்தி, சதீஷ்குமார் ஆகிய 5 பேரும் சேர்ந்து, அந்த பெண்ணை வழிமறித்து, ஆண் நண்பர் சுரேந்திரனை அடித்து விரட்டி உள்ளனர்.

இதனையடுத்து, அந்த பெண்ணை கட்டியணைத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அந்த பெண் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியுள்ளார். இதனையடுத்து, அந்த பெண்ணை அங்கேயே 5 பேருமாகச் சேர்ந்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும்போது, நண்பர்களுக்குள் சண்டை வந்துள்ளது. அப்போது, பிரகாஷை மற்ற 4 பேரும் சேர்ந்து அடித்தே கொன்றுள்ளனர். இதில், பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

மேலும், பிரகாஷ் உயிரிழந்தது பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத அவர்கள், பிரகாஷ் சடலம் அருகில் கிடைக்கையிலேயே, அந்த பெண்ணை துடிக்கத் துடிக்க மீண்டும் பலாத்காரம் செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து எப்படியோ தப்பி வந்த அந்த பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கூட்டுப் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 பேரையும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, மது போதையில் நண்பனை அடித்துக்கொன்று, அந்த சடலத்தின் முன்பே மற்ற 4 பேரும் கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.