நாமக்கல்லில் 16 வயது சிறுமிக்குப் பெண்குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அடுத்துள்ள கோப்பன்னம்பாளையம் கிராமத்தைச் சேந்த 16 வயது நிர்மலா, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறார்.

இந்நிலையில், நிர்மலா கருவுற்ற நிலையில், பரமத்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, 16 வயது இளம் பெண்ணுக்குக் குழந்தை பிறந்திருப்பதாக, மருத்துவமனை சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, மருத்துவமனைக்கு விரைந்து வந்த பரமத்தி மகளிர் போலீசார், குழந்தைப் பெற்ற சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, நிர்மலாவின் தாய்மாமன் 22 வயதுடைய ஆனந்தை காதலித்தது தெரியவந்தது. மேலும், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, நிர்மலாவை, அவர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதன் காரணமாக, அந்த சிறுமி கருவுற்ற நிலையில், தற்போது குழந்தை பிறந்துள்ளது என்று விசாரணையில் தெரியவந்தது.

இதனிடையே, திருமண வயதை எட்டாத சிறுமியை, காதல் என்ற பெயரில் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டி, போக்சோ சட்டத்தின் கீழ் ஆனந்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை சேலம் மத்தியில் சிறையில் அடைத்தனர்.