குடிப் பழக்கத்தைக் கணவன் நிறுத்தாததால் 2 குழந்தைக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறுகுவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் பிரவின் ராஜு - மினி தம்பதியினருக்கு,
பிஷா மோள், ரிச்சர்ட் மோனு என 2 குழந்தைகள் உள்ளனர். பிரவின் ராஜு, நாகர்கோவில் பகுதியில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே பிரவின் ராஜு, மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இது தொடர்பாக அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளது.

இதனால், வெறுப்போன் அவரது மனைவி மனி, “ நீ குடிப் பழக்கத்தை விடவில்லையென்றால், குழந்தைகளையும் கொன்று நானும் செத்துவிடுவேன்" என்று கணவரைக் கடைசியாக எச்சரித்துள்ளார்.

ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத பிரவின் ராஜு, வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால், மனமுடைந்த மினி, தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து, தானும் குடித்துள்ளார்.

இதனால், பதறிப்போன பிரவின் ராஜு, தலையில் அடித்துக்கொண்டு, 3 பேரையும் அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால், அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த மினி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவரது 2 குழந்தைகளுக்கும் தீவிரமாகத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரவின் ராஜுவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, 2 குழந்தைக்கு விஷம் கொடுத்து, தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.