17 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து, 9 ஆம் வகுப்பு மாணவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாற்றுத்திறனாளி மாணவியை, கடந்த சில நாட்களுக்கு முன்பு காணவில்லை. இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்தவர் 9 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் வீட்டில், மாணவி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அங்குச் சென்ற மாணவியின் பெற்றோர், கடத்தப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவியை மீட்டனர்.

பெற்றோரைக் கண்ட மாணவி, தனக்கு அந்த மாணவன், தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி கதறி அழுதுள்ளார்.

இதனையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவியை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதை உறுதி செய்தனர்.

பின்னர், போக்சோ சட்டத்தின் கீழ் பள்ளி மாணவனை, போலீசார் கைது செய்தனர். மாணவனுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்பதால், தஞ்சாவூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மாணவனைச் சேர்த்தனர்.

இதனிடையே, 18 வயதுகூட பூர்த்தியாகாத 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன், 17 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி வைத்து, பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.