சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்றார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி, கடந்த சில மாதங்களுக்கு முன் மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், இதை எதிர்த்து தனது பதவியைச் செப்டம்பர் 6 ஆம் தேதி, அவர் ராஜினாமா செய்தார். அதனால், சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் பொறுப்பு தலைமை நிதிபதிகயாக, மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வந்த ஏ.பி.சாஹி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், புதிய தலைமை நீதிபதியின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில், சென்னை உயர் நீதிமன்றத்தின் 49 வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி முறைப்படி பதவியேற்றார்.புதிய தலைமை நீதிபதிக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், தமிழக அமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலரும் பங்கேற்றனர்.