12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அடுத்த பறக்கை பகுதியைச் சேர்ந்தவர் 55 வயதான பாலன், அப்பகுதியில் தினமும் அதிகாலையில் வீடு வீடாகச் சென்று பேப்பர் போட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி ஒரு வீட்டில் பேப்பர் போடும் போது, அந்த வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமி நேரில் வந்து பேப்பரை வாங்கியிருக்கிறார். அப்போது, அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்தில், அந்த மாணவியைப் பலவந்தமாகத் துன்புறுத்தி உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, கத்தி கூச்சல் போட்டுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு, அவரது பெற்றோர்கள் வருவதற்குள், அந்த முதியவர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். இதனையடுத்து, தனக்கு நேர்ந்ததை, தனது பெற்றோரிடம் அந்த சிறுமி கூறியுள்ளார்.

இது குறித்து, சிறுமியின் பெற்றோர் அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான பாலனைக் கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.